Published: 27 செப் 2017

தங்க சுத்திகரிப்பின் வரலாறு

Gold Extraction And Refining

மனிதர்களுக்கும் தங்கத்திற்கும் இடையிலான காதல் உறவின் துவக்கம் என்பது சுமார் கி.மு 3000-6000 ஆண்டுகளில் தங்கத்தை உருக்குவதில் தொடங்குவதாக நம்பப்படுகிறது. ஆர்.ஜே. ஃபோர்ப்ஸ் என்பவரின் பண்டைய தொழில்நுட்பங்களில் ஆய்வுகள் என்ற புத்தகத்தின்படி, இந்த உத்தியானது மெசொபொட்டாமியா அல்லது சிரியாவில் தொடங்கியது. பண்டைய கிரேக்கத்தில், ஹெரக்லிட்டஸ் என்பவர் இந்த விஷயம் குறித்து எழுதியுள்ளார்.

'கிமு 2,300 காலத்தைச் சேர்ந்த எகிப்திய சுவர் சிற்பங்களானது, பண்டைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்கத்தின் பல்வேறு சுத்திகரிப்பு மற்றும் இயந்திர வேலைகளின் பல்வேறு நிலைகளைக் காண்பிக்கிறது', என்று என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது. பண்டைய எகிப்தியர்கள் நதிகளின் கரைகளில் தங்கத்தை வெட்டி எடுக்கும் முறையில் தங்கத்தைப் பிரித்தெடுத்தனர். தாதுக்கள் படியும் பொழுது, மதிப்புமிக்க தாதுக்களானது அதன் அடர்த்திக்கு ஏற்ப படியும், இந்த செயல்முறையில் அவை நதிகளின் கரைகளில் இருந்து தோண்டியெடுக்கப்படுகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆற்று மணல்களில் காணப்படும் தங்கத் துகள்களை எகிப்தியர்கள் பயன்படுத்தினர்.

மணல் சேகரிக்கப்பட்ட பிறகு, இலகுவான ஆற்று மணல்களை தண்ணீரால் கழுவி வெளியேற்றுவதன் மூலம் தங்கம் செறிவூட்டப்படுகிறது, இதனால் அடர்ந்த தங்கத் துகள்கள் மட்டும் எஞ்சியிருக்கின்றன. இந்தத் துகள்கள், மேலும் உருக்குவதன் மூலமாக சுத்திகரிக்கப்படுகின்றது. பின்னர் அவை தேவையான வடிவங்களில் வார்க்கப்படுகின்றன. வெள்ளியை அகற்றுவதற்கும், தங்கம் மட்டும் எஞ்சியிருப்பதற்கும் உப்பு மூலம் கலவையை சுத்திகரிக்கும் செயல்முறையானது கி.மு 2000 ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது என்று ஃபோர்ப்ஸ் ஆவணப்படுத்தியுள்ளது.

தங்கத்தை சுத்திகரிக்கும் இந்த உத்திகளானது ஸ்பெயின் நாட்டை கி.பி.100ஆம் ஆண்டில் இறுதியாக அடைந்தன, அவர்கள் இன்றைய இந்தியர்களைப் போன்றே அந்த விலைமதிப்பற்ற உலோகத்தை புதிரானதாகக் கருதினர். அந்த நேரத்தில் ஸ்பெயினில் உள்ள தங்கச் சுரங்கங்களில் 40,000 அடிமைகள் வேலை செய்ததாக கூறப்பட்டது என்று தங்கத் தாது பிரித்தெடுத்தல்: திட்ட மேம்பாடு மற்றும் இயக்கங்கள் என்ற நூலில் மைக் டி. ஆடம்ஸ் தொகுத்துள்ளார்.

சுமார் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில், பாதரசம் பயன்படுத்தி மணலில் இருந்து தங்கத்தின் சிறிய துகள்களை ஈர்க்கும் அமால்கமேஷன் செயல்முறை கண்டுபிடிக்கப்படும் வரை, கிறிஸ்தவத்தின் தோற்றம் காரணமாக தங்கத்திற்கான தேவையானது சிறிது தணிந்திருந்தது. அதற்குப் பிறகு, புதிய உலகின் படையெடுப்பு காரணமாக தங்கச் சுரங்கம் தோண்டுதல் அதிவேக வளர்ச்சி கண்டது. விரைவிலேயே, பிரேசில், ரஷியாவில் உள்ள சைபீரியாவின் யூரல் மலைகள் மற்றும் கலிஃபோர்னியா, மற்றும் தென் ஆப்பிரிக்காவின் விட்வாட்டர்ஸ்ராண்ட் பகுதி ஆகிய மிகப்பெரிய அளவிலான தங்க இருப்புகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பெரிய அளவிலான தங்கச் சுரங்கங்கள் அகழப்பட்டன.

தென் ஆப்பிரிக்காவில் தங்க இருப்புகள் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது, சயனைடேஷன் செயல்முறையும் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறைந்த தரத்திலான தாதுகளிலிருந்தும் தங்கத்தை மீட்டெடுப்பதை சாத்தியமாக்கியது. மேலும், இது இன்றைய காலகட்டத்திலும் தங்கத்தைப் பிரித்தெடுப்பதற்கான மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் செயல்முறை ஆகும்.

குளோரின் வாயுவைக் கொண்டு தூய்மையற்ற தங்கத்தை சுத்திகரிக்கும் ஈ.பி.மில்லரின் செயல்முறை (1867ஆம் ஆண்டில் பிரிட்டனில் காப்புரிமை பெற்றது) மற்றும் எமில் வால்வலின் மின்-சுத்திகரிப்பு செயல்முறை (1878 ஆம் ஆண்டில் ஹம்பர்க், ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டது) ஆகியவை தூய தங்கத்தை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பமாகும். உண்மையில், 99.99 சதவிகித தூய்மை கொண்ட தங்கம் என்பது இந்தச் செயல்முறைகளின் கலவையைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது.

திடீரென, தங்கத்தை சுத்திகரிப்பது என்பது எளிதாகவும், மலிவாகவும் மாறியது. இந்த இரண்டு முறைகளும் இன்று பயன்படுத்தப்படும் தங்க சுத்திகரிப்பு முறைகளில் மிகவும் பிரபலமானவையாகும்.