Published: 27 செப் 2017

இந்தியாவின் அடிவானத்தில் புதிய தங்கச் சுரங்கங்கள் இருக்கின்றனவா?

Indian Gold Mines - Renewed Search For Gold

.மு. 5ஆம் நூற்றாண்டில், வரலாற்றின் தந்தையாக குறிப்பிடப்படும் கிரேக்க வரலாற்றாசிரியரான ஹீரோடோட்டஸ் என்பவர், இந்தியாவில் எறும்புகள் எவ்வாறு தங்கக் கட்டிகளை மண்ணில் இருந்து வெளியே எடுக்கிறது என்பதைப் பற்றிய ஒரு கதையைக் (தனது புத்தகமான கதைகள் என்பதின் மூன்றாவது பதிப்பில்) கூறுகிறார். ஹீரோடோட்டஸில் இருந்து, பல ஆண்டுகளாக வரலாற்றாசிரியர்கள் இந்தக் கதையின் உண்மையான ஆதாரத்தை அல்லது பின்னணியைக் கண்டுபிடிக்க முயற்சித்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் அதில் தோல்வியடைந்தனர். ஆனால், தென் ஆப்பிரிக்காவில் கரையான் புற்று குன்றுகளின் இருப்பு என்பது எப்படி பெரும்பாலும் தங்க இருப்புகளைக் கண்டுபிடிப்பதற்கான வழிமுறையாகப் பார்க்கப்படுகிறது என்பதை மற்றவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 800-900 டன் தங்கத்தைப் பயன்படுத்தும் நாம், உலகின் மிகப்பெரிய தங்க நுகர்வோராக இருந்த போதிலும், இந்தியாவின் சுரங்கங்களில் மிகக் குறைவான அளவே தங்கம் எடுக்கப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள ஹட்டி தங்க சுரங்கமே இந்தியாவின் கடைசி தங்க சுரங்கமாக இருந்தது; அங்கு 1902ஆம் ஆண்டில் உற்பத்தி தொடங்கியது, மேலும் 2015 ஆம் ஆண்டில் அங்கு 45,000 அவுன்ஸ் அல்லது கிட்டத்தட்ட 1.275 டன் மஞ்சள் உலோகம் உற்பத்தி செய்யப்பட்டது. கர்நாடகாவில் உள்ள பெங்களூருவிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோலார் தங்க வயல்களானது, 120 ஆண்டுகளாக இயங்கி, 2001ஆம் ஆண்டில் மூடப்படுவதற்கு முன்பு, அதன் ஆயுட்காலத்தில் 800 டன்கள் தங்கத்தை உற்பத்தி செய்தது.

தங்கத்திற்கான தேடலை மேற்கொள்ள இன்றைய காலகட்டங்களில் கணிசமான உற்சாகம் ஏற்பட்டுள்ளது. கோலார் தங்க வயல்களின் சுரங்கங்களை மீண்டும் திறப்பது பற்றி அதிகம் பேசப்படுகிறது; இன்றைய விலைவாசியின் மதிப்பில் சுமார் 2 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இருப்புக்கள் அங்கு உள்ளதாக சிலர் பரிந்துரைக்கிறார்கள். தங்கத்தின் இருப்புகளுக்கு தென் இந்தியாவின் மண்ணியல் அமைப்பு சாதகமாக உள்ளதாக சில நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்; மேம்படுத்துவதற்காக ஒப்பந்தம் வழங்கப்படவுள்ள சுரங்கங்களின் தொடக்கப் பட்டியலில், மூன்று தங்கச் சுரங்கங்கள் உள்ளன.

2016 பிப்ரவரியில், வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனமானது சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பக்மாரா தங்கச் சுரங்கத்திற்கு விண்ணப்பித்து, ஒப்பந்தம் பெற்ற முதல் நிறுவனமாக ஆனது; வேதாந்தா இந்தியா நிறுவனமானது அதன் தாமிர மற்றும் துத்தநாக சுரங்கங்களிலிருந்து சிறிதளவு வெள்ளியுடன் சேர்த்து, தங்கத்தை ஒரு உப-பொருளாக ஏற்கனவே பிரித்தெடுக்கிறது. கர்நாடகாவில், ஒரு பட்டியலிடப்பட்ட நிறுவனமான டெக்கான் கோல்ட் மைன்ஸ் என்பது அதன் கனஜுர் திட்டத்தில் இந்த ஆண்டில் மீண்டும் உற்பத்தி செய்ய முடியும் என்று நம்புகிறது; எதிர்பார்க்கப்படும் உற்பத்தியானது, ஆண்டுதோறும் சுமார் 1.3 டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் (AP), மாநில அரசாங்கமானது கர்நூலில் சுரங்கத் தொழிலை தொடங்குவதற்கு, ஆஸ்திரேலிய இந்திய ரிசோர்ஸ் உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. கர்நூல், அனந்தப்பூர் மற்றும் சித்தூர் ஆகியவை உள்ளடங்கிய ஆந்திராவில் உள்ள ராயலசீமா பகுதியில் குவார்ட்ஸ் உள்ள பாறைப் படிமங்கள் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தியாவின் தங்க வேட்டை மீண்டும் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.