Published: 28 ஆக 2017

இந்தியாவில் நகைகளின் தோற்றம்

நகைகளால் பேச முடிந்தால் என்ன பேசும்?

பூமியின் ஆழத்தில் உள்ள தனது வீட்டில் தான் பிறந்தது குறித்த கதையையும், மேலும் பல்வேறு பட்டறைகள் மற்றும் கலைஞர்களின் பணிமனைக்கான அவற்றின் பயணம், வர்த்தகம் செய்யப்பட்டது, தொலை தூரங்களுக்கு அனுப்பப்பட்டது, ஒரு உரிமையாளரிடம் இருந்து மற்றொருவருக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது குறித்த கதைகளையும் அவற்றால் நமக்கு சொல்ல முடியும். உலகின் நகைகளானது, பல்வேறு உணர்ச்சிகள், கலாச்சாரம், உலகம் முழுவதும் பல்வேறு மக்கள் போன்ற அனைத்தையும் பார்த்திருக்கிறது.

இந்தியாவில் நகைகளின் வேர்கள் என்பது நமது நாட்டைப் போலவே பழமையானதாகும். சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர், அலங்காரங்களுடன் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையினால் நகைகள் பிறந்தது. ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவரும் சமமாக நகைகள் மீது ஆசைப்பட்டனர். கடவுளர்களும், தேவியர்களும் நகைகளால் அலங்கரிப்பட்டிருந்ததால், அவர்களைப் பின்பற்ற மக்களைத் தூண்டியது என்று நம்பப்படுகிறது. புராணங்கள் மற்றும் வேத நூல்கள் ஆகியவை தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட நகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கடவுளர்கள் மற்றும் தேவியர்களின் தோற்றத்தைப் புகழ்கிறது.

காலப்போக்கில், சமுதாயத்தில் உரிமையாளரின் செல்வத்தின் அந்தஸ்தைக் காட்ட தங்க ஆபரணம் ஒரு வழிமுறையாக மாறியது. அதிக தங்கத்தை அணிந்திருக்கும் ஒரு பெண்மணி, அதிக செல்வத்தைக் கொண்டிருப்பதாக நினைக்கப்பட்டார். அவளுடைய கணவர் அவளை நேசிக்கிறார் என்றும், அவளுடைய தேவைகளை கவனித்துக்கொள்ளும் திறன் அவருக்கு இருந்தது என்றும் இதற்கு அர்த்தமாகும். தங்க நகைகளை உருவாக்கும் கலை வளர்ச்சியடைந்தது மற்றும் பாரம்பரிய வடிவங்களானது விரிவான கலைப்படைப்பு, மற்றும் வடிவமைப்புகளுக்கு வழிவகுத்தது.

குறிப்பாக குச்சிப்புடி, கதக் அல்லது பரதநாட்டியம் போன்ற பல்வேறு நடன வடிவங்களினூடாக, தங்கம் என்பது ஒருவரின் மனநிலையை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய வடிவமாக மெதுவாக மாறியது. நடனக்கலைஞர்கள், அவர்களின் நடன அசைவுகள் மற்றும் முகபாவங்களைப் போலவே, அவர்கள் நடனத்தின் ஒரு பகுதியாக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தங்க ஆபரணங்களை அணிந்தனர். தங்கம் என்பது அரசகுலத்தின் ஒரு சின்னமாக மாறியது. அரச குடும்பத்தினர்கள், மிகத் திறமையான மற்றும் புகழ்பெற்ற கைவினைஞர்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மற்றும் ஆடம்பரமான கலைப்படைப்புகளால் தங்களுடைய அரண்மனைகளை நிரப்புவதன் மூலம் தங்கத்தின் புகழை அதிகப்படுத்தினர்.

ஒரு குடும்பத்தில் பெண்ணின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வழிமுறையாகவும் தங்க நகைகள் நோக்கப்படுகின்றன. திருமணத்தின் போது, மணப்பெண்ணிற்கு அவரது பெற்றோர்களால் சீதனமாக (பெண்களின் செல்வம்) தங்க நகைகள் அளிக்கப்படுகின்றன. அவர்களுக்கு எப்போதாவது நிதி நெருக்கடி ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள உதவும் வகையில் இந்த சீதனம் அளிக்கப்படுகிறது. மணப்பெண்ணின் மங்களசூத்ரா, கங்கனாண்ட், மாங் டீக் போன்ற சில நகைகள், திருமணமான பெண்களின் பாரம்பரிய தோற்றத்திற்கு இணங்க இருக்கிறது. இதேபோல், குழந்தைகளின் பிறப்பு சடங்கின் ஒரு அங்கமாக, குழந்தைகளின் எதிர்காலத்திற்கான பாதுகாப்பிற்கான வழிவகையாக தங்க ஆபரணங்கள் அளிக்கப்படுகின்றன.

சமுதாயத்தில் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்களையொட்டி, நவீன நகைகள் உருவாகியுள்ளன. நேர்த்தியான கனரக நகைகளானது இப்போது திருமணங்கள், திருவிழாக்கள் அல்லது அது போன்ற பெரிய சந்தர்ப்பங்களில் மட்டுமே அணியப்படுகிறது. அன்றாட பயன்பாட்டிற்காக நவீன கால இந்தியப் பெண்கள் இலேசான ஆனால் வலிமையான தங்க நகைகளை விரும்புகிறார்கள்.

இருப்பினும் இந்தப் போக்கு கிராமப்புற இந்தியாவில் வேறுபட்டுள்ளது, அங்கே தங்கம் என்பது அலங்காரம் மற்றும் முதலீடு ஆக கருதப்படுகிறது. தங்கம் என்பது உடனடியாக பணமாக மாற்றக்கூடிய ஒரு சொத்து வடிவமாகக் கருதப்படுகிறது என்பதும், கிராமப்புற இந்தியாவில் பிற முதலீடுகள், இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருப்பதும் இதற்கான முக்கியக் காரணமாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

நகைகள் தோன்றியது முதல், இந்தியா முழுவதும் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பரவலாகப் புகழ் பெற்றுள்ளது. மேலும், தங்கத்தின் மீதான மோகம் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. வடிவமைப்பு மற்றும் போக்குகள் ஆகியவை மாறலாம், ஆனால் தங்கம் எப்போதும் நிலைத்து நீடித்திருக்கும்.