Published: 11 செப் 2017

கோவில் நகை - தங்கம் & பாரம்பரியம்

இந்தியாவின் தென் பகுதியில் பல்வேறு தெய்வங்கள் கொண்ட பல கோவில்கள் அமைந்துள்ளது. இந்த கோவில்களில், பண்டைய காலங்களிலிருந்து தங்கம் மற்றும் இதர விலையுயர்ந்த இரத்தினக்கற்கள் மூலம் சிலைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அந்த நகைகளானது பல நூற்றாண்டுகளின் புதையலாக உள்ளது, அவை கோவில் நகைகள் என்று பிரபலமாக அறியப்படுகின்றன.

கோவில் நகைகள், தூய தங்கத்தால் தயார் செய்யப்பட்டவை ஆகும். அவற்றில் கிரீடங்கள் அல்லது மற்ற தலையில் சூடும் ஆபரணங்கள், காதணிகள், மூக்கில் அணியும் ஆபரணங்கள், கழுத்தணிகள், வளையல்கள், ஒட்டியாணம், கால் கொலுசுகள் ஆகியவை அடங்கும். இந்த ஆபரணங்களானது தெய்வத்திற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டவையாக இருக்கும் அல்லது கோவிலுக்கு நன்கொடையாகப் பெறப்பட்ட பொருந்தாத தங்க நகைகள் அல்லது தங்கக் கட்டிகளில் இருந்து வடிவமைக்கப்பட்டதாக இருக்கும். சிலைகள் தவிர, கோவில் அல்லது நாடகக் கலைஞர்கள் ஆகியோர் புராணம் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோயில் நகைகளை அணிந்து வருகின்றனர். இந்த நகைகளானது நடன நகைகள் என்றும் அறியப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில், பாரம்பரிய கோவில் நகைகள் என்பது இனி தெய்வங்களுக்கும் கலைஞர்களுக்கும் மட்டுமானது அல்ல. நவீன வடிவமைப்புகளுடன் இந்திய பாரம்பரியத்தை இணைக்கும் அதன் நேர்த்தியான வடிவமைப்புகளை விரும்பும் இளைய சமுதாய இந்தியர்களிடையே இந்த வகை நகைகளானது நவநாகரீக பாணியாக கருதப்படுகிறது. இந்த வகையான நகைகளானது, தங்களது கவர்ச்சியை மற்றும் படைப்பாற்றலை வெளிக்காட்ட, அன்றாட பயன்பாட்டுக்கோ அல்லது சிறப்பு சூழல்களிலோ பெண்களால் பயன்படுத்தப்படுகிறது.

காதணிகள், வளையல்கள், சங்கிலிகள், பிரேஸ்லெட்டுகள், கழுத்தணிகள், சோக்கர்ஸ், மோதிரங்கள் மற்றும் கால் வளையங்கள் ஆகியவை கோயில்களினால் ஈர்க்கப்பட்ட பொதுவான வகை நகைகள் ஆகும். அனைத்து வடிவமைப்புகளிலும், கோவில் நகைகளில் உள்ள காதணிகளில் மணி வடிவ வடிவமைப்பே மிகவும் விரும்பப்படும் வடிவமைப்பாக இருக்கிறது. இந்தக் காதணிகளானது வழக்கமாக சுத்தமான தங்கத்தில் வடிவமைக்கப்படுகின்றன, இது பாரம்பரிய பாணியைக் காட்டுகிறது. அதேபோல், வளையல்களில் இணைக்கப்பட்ட தொங்கும் மணிகளானது இந்தியாவில் உள்ள பெண்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்து தெய்வங்களின் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட தங்க நார்கள், தங்க நாணயங்கள், மலர்கள், சிறிய வளைவான கம்பளி இழைகள் மற்றும் விளிம்பில் ருத்ராட்ச கற்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட தங்க சங்கிலிகள் என்பது கோவில் நகைகளில் உள்ள மற்றொரு சிறந்த ஆபரணமாகும். சங்கிலிகள் மட்டுமல்லாமல், செல்வத்தின் கடவுளான லக்ஷ்மியின் உருவத்தைக் கொண்டிருக்கும் கோவில் கழுத்தணிகளை பெண்கள் பிரதானமாக விரும்புகின்றனர்.
பாரம்பரிய நடன கலைஞர்கள் மற்றும் மணமகள் ஆகியோர் தங்களின் பாரம்பரிய தோற்றத்தை மேம்படுத்தும் வகையில், பெரும்பாலும் நீண்ட மற்றும் அலைஅலையான முடியுடன், கோவில் ஆபரணங்களை அணிகின்றனர். தங்கம் பூசப்பட்ட, மணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் ஒட்டியாணம் என்பது இவற்றில் ஒன்றாகும்.

கோயிலின் நகைகளானது இந்தியாவின் தெய்வீக மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தில் நூற்றாண்டுகளாக உருவாகியுள்ள கதைகளைக் கூறுகிறது. தென்னிந்தியாவில் உள்ள பழங்கால குடும்பத்தின் வம்சத்தினர்களால் வடிவமைக்கப்பட்ட நகைகளே அசலான வடிவமைப்பு என்று கூறப்படுகிறது, இது இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பரவலாக வாங்கப்படுகிறது. கோவில் நகைகளின் முக்கியத்துவத்தையும், தற்போதைய தேவையையும் கருத்தில் கொண்டு பார்த்தால், கோவில் நகைகள் என்பது வருங்காலத்தில் மிகவும் விரும்பப்படும் நகை வடிவமைப்புகளில் ஒன்றாக இருக்கும்.