Published: 01 செப் 2017

தேவா நகை – ராஜஸ்தானின் பெருமை

தங்கப் பறவையின் நிலமான இந்தியாவில் தங்களுடைய பெருமை மற்றும் செல்வாக்கிற்காக முகலாயர்கள் அறியப்பட்டனர். அவர்களுடைய ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட நேர்த்தியான கலைப்படைப்புகள் இன்றும் இந்தியர்களால் நேசிக்கப்படுகின்றன. இந்த வடிவமைப்புகளும் கலைப்படைப்புகளும் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதியாகும், இவை உலகெங்கிலும் பெருமையுடன் காட்சிப்படுத்தப்படுகின்றன.

தேவா என்பது இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் முகலாய காலத்தில் தோன்றிய அத்தகைய கலைவடிவங்களின் ஒன்றாகும். தேவா என்ற வார்த்தைக்கு உள்ளூர் ராஜஸ்தானிய மொழியில் "அமைத்தல்" என்று அர்த்தமாகும். ஒரு தேவா ஆபரணத்தை உருவாக்க, "தேவாக்கி பட்டி" (தேவாவின் தகடு) என்று அழைக்கப்படும் ஒரு மெல்லிய 23 காரட் தங்கத் தகடை கைவினைஞர் உருவாக்குகிறார். இந்தத் தகடானது உருகிய-கண்ணாடியில் நேர்த்தியாகப் பொறிக்கப்படுகிறது, இது தங்க வேலைப்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் ஜொலிக்கும் தோற்றத்தைப் பெற ஒரு சிறப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்படுகிறது. ஒரு தேவா நகையை முடிக்க ஒரு திறமையான கலைஞருக்கு ஒரு மாதத்திற்கு மேல் ஆகலாம். ஹிந்து புராணம், முகலாய நீதிமன்ற காட்சிகள், பிற வரலாற்று நிகழ்வுகள் அல்லது தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் ஆகியவை தேவா நகைகளின் பிரபல தீம்களில் அடங்கியவை ஆகும்.

1707ஆம் ஆண்டில், பிரதாப்காரிலிருந்த நாது ஜி சோனி என்று என்றழைக்கப்பட்ட கைவினைஞர், மிகவும் விலையுயர்ந்த கலை வடிவங்களில் ஒன்றான தேவாவை உருவாக்குவதற்கான செயல்முறையை கண்டுபிடித்தார். "ராஜ்-சோனிஸ்" என்று அழைக்கப்படும் அவரது குடும்பத்தின் அடுத்த தலைமுறைக்கு இந்த திறமைகளை அவர் கொண்டு சென்றார். இந்தக் குடும்பத்தின் கைவினைஞர்கள், பல்வேறு யுனெஸ்கோ, மத்திய மற்றும் மாநில அரசு விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

2011-ல், ராஜஸ்தானின் ராஜ்-சோனிஸ், ஒன்பது தேசிய விருதுகள் பெற்ற ஒரே குடும்பத்தினராக லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்றனர். 2015ஆம் ஆண்டில், மகேஷ் ராஜ் சோனிக்கு, அவரின் மிகச்சிறந்த தேவா கைவினைத் திறனுக்காக இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமக்களுக்கான விருதான பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது.

2004ஆம் ஆண்டில் இந்திய அரசால் வெளியிடப்பட்ட தேவா கலைப்படைப்புகள் கொண்ட அஞ்சல்தலையானது, தேவா கலைநயத்தை கொண்டாடுகிறது, மேலும் தேவா கலைப்படைப்பானது இளவரசர் சார்லஸுக்கு அவரது திருமணத்தின் போது வழங்கப்பட்டது.

தேவா நகைகளானது பாலிவுட்டில் உள்ள நட்சத்திரங்களில் சிலர் உட்பட இளைய, நவநாகரிக மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. பதக்கங்கள், வளையல்கள், காதணிகள், மணிக்கட்டு அணிகள் முதலியவற்றைப் போன்ற தேவா நகைகள் மதச் சடங்குகள், திருவிழாக்கள், திருமணம், அல்லது விருந்துகளில் கூட அணியப்படுகிறது. தேவா ஆபரணங்களின் அரிய மற்றும் நேர்த்தியான அழகானது, அனைத்துச் சூழல்களிலும் உங்கள் தோற்றத்தின் கவர்ச்சியை மெருகூட்டுகிறது.